விஜய் சம்பளத்தை குறைக்க வேண்டும் – வினியோகஸ்தர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரனமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக திரைத்துறை மொத்தமாக முடங்கியது. திரைத்துறையில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். எனவே, தயாரிப்பாளர்களுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, முன்னணி நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்தது. விஜய் ஆண்டனி உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தனர். ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்கள் அமைதியாக இருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அமர வைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், தியேட்டர்களில் சிறிய படங்கள் வெளியிடப்பட்டு வருவதால் கூட்டமும் இல்லாமல் காத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான வியாபார பேச்சுவார்த்தையில்தான் வினியோகஸ்தர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளதாக கருதப்படுகிறது.