![ஏ.ஐ. தொழில்நுட்ப விபரீதம்: போலி வீடியோ பற்றி ராஷ்மிகா வேதனை! - Dhinasari Tamil](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2023/11/e0ae8f-e0ae90-e0aea4e0af8ae0aeb4e0aebfe0aeb2e0af8de0aea8e0af81e0ae9fe0af8de0aeaa-e0aeb5e0aebfe0aeaae0aeb0e0af80e0aea4e0aeaee0af8d.jpg?resize=640%2C360&ssl=1)
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அரை குறை ஆபாச ஆடையுடன் இருப்பது போன்ற போலியாக சித்திரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
பிரபலங்களின் முகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனும் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் – ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்தனர். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் போலி வீடியோ குறித்து ராஷ்மிகா, தனது ‛எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆன்லைனில் என்னை போலியாக சித்திரித்து பரபரப்படும் வீடியோவை பற்றி மிகவும் வேதனையுடன் இதனை பகிர்கிறேன்.
தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கையில், எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரும் பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும் இருக்கும் எனக்கு ஆதரவாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இது என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால், இதனை எப்படி சமாளித்திருப்பேன் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பு, இது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு பதில் கொடுத்திருந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அரசு இந்த விவகாரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.