[prisna-google-website-translator]

த்ரிஷாவிற்கு மட்டும் எச்சரிக்கையா?

நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்து பேசியது சினிமா வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா நடித்துள்ள படம், பரமபதம் விளையாட்டு. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்கியுள்ளர்.

நந்தா, ரிஷி, வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று காலை நடந்தது.

அடுத்த படத்திற்கு தயாராகும் நடிகர் விஜய்.. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பார்த்தாரா? பரபர தகவல்!

இதில், படத்தின் நாயகி த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. படத்தில் பெரிய ஹீரோ இல்லை என்பதால் அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அதோடு அவர் நேற்று துபாயில் இருந்தாராம். இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, நடிகை த்ரிஷாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் கூறும்போது, இந்தப் படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷா வரவில்லை என்பது வருத்ததற்குரிய விஷயம். பெரிய நடிகர் படங்கள் என்றால் ஹீரோக்களை வைத்து புரமோஷன் செய்யலாம். ஆனால் இதுபோன்ற படங்களுக்கு ஹீரோயின் வரவேண்டும். அது படத்துக்கு உதவும். அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்குமுன் புரோமோஷனில் த்ரிஷா கலந்து கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் இந்தப் படத்துக்காக, அவர் வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திரும்பப் பெறுவோம் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறேன். இதை இப்படியே விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க முடியாது. இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் என்றார்.

இந்த எச்சரிக்கை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பு இப்போது, விவாதமாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இதுபற்றி விவாதித்து வருகின்றனர். நடிகர் அஜித், நடிகை நயன்தாராவுக்கு ஒரு நியாயம், த்ரிஷாவுக்கு ஒரு நியாயமா என்று விவாதித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் தனது படங்களின் எந்த புரமோஷனுக்கும் செல்வதில்லை. அவர் எந்த விழாக்களுக்கும் வருவதில்லை என்பதால் அவரை படத் தயாரிப்பாளர்கள் அழைப்பதில்லை. விருது விழாவுக்கு கூட அவர் செல்வதில்லை. இதே போல நடிகை நயன்தாராவும் அவர் நடித்த பட விழாக்களின் புரமோஷனுக்கும் வருவதில்லை. ஆனால், விருது விழாக்களில் ஆஜராகி விடுவார்.

இவர்களை கண்டுகொள்ளாமல் த்ரிஷாவுக்கு மட்டும் ஏன் எச்சரிக்கை என்று சில தயாரிப்பாளர்களிடம் விசாரித்தோம். அவர்கள் கூறும்போது, ‘ஒவ்வொரு படத்துக்கும் தயாரிப்பாளரும் நடிகர், நடிகைகளும் ஒப்பந்தம் போடும்போதே, புரமோஷனுக்கும் வரவேண்டும் என்பதை அதில் சேர்த்திருப்பார்கள். அதை ஒப்புக்கொண்டுதான் நடிகர், நடிகைகள் கையெழுத்துப் போடுவார்கள்.

ஆனால், நடிகர் அஜித்துக்கும் நயன்தாராவுக்குமான ஒப்பந்தங்களில் இது இடம்பெறாது. நாங்கள் வரமாட்டோம் என்று முதலிலேயே கூறிவிடுவார்கள். ஆனால், படத்தின் புரமோஷனில் கலந்துகொள்வேன் என்று த்ரிஷா கையெழுத்து போட்டிருக்கிறார். ஒப்புக்கொண்டு பணம் வாங்கிய பின் வாரததால்தான் படத்தின் தயாரிப்பாளர் ஏமாற்றம் அடைந்தார். இதனால்தான் டி.சிவா அப்படி பேசினார் என்று கூறியுள்ளனர்

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply