‘துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கினை நீக்கியது ஏன் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிஷகின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்தப் படம், துப்பறிவாளன். இதில் கனியன் பூங்குன்றனாக அவர் நடித்திருந்தார்.

பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசை அமைத்திருந்தார்.

தனது விஷால் பிலிம்பேக்டரி மூலம் நடிகர் விஷாலே படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி மிஷ்கின், விஷால், பிரசன்னா இணைந்தனர். ஹீரோயினாக ஆஷ்யா ஒப்பந்தமானார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

சென்னைத் திரும்பிய படக்குழு, அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியான நிலையில் மிஷ்கின் படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இது ஏன் என்று விசாரித்த போது சினிமா வட்டாரத்தில் கூறப்படுவதாவது: லண்டனின் துப்பறிவாளன் படத்தின் லொகேஷன் பார்க்க மூன்று முறை சென்றார் மிஷ்கின்.

மூன்றாவது முறையாக சென்றபோது, ஒரு மாதம் வரை அங்கு தங்கினார். இதன் செலவை தயாரிப்பாளர் செய்தார். இதையடுத்து படக்குழு ஷூட்டிங்குக்குச் சென்றது. வழக்கமாக ஒரு படத்தின் ஷூட்டிங்கை ஒரு லொகேஷனில் நடத்த வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு முன்பே பர்மிஷன் வாங்கி வைத்திருக்க வேண்டும்.

அதுதான் சினிமாவில் வழக்கம். ஆனால், மூன்று முறை லண்டன் சென்ற மிஷ்கின், சரியாக திட்டமிட வில்லையாம்.

இதனால் இரண்டு மூன்று நாட்கள் லண்டனில் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது. வெளிநாட்டில் ஷூட்டிங் தடைபட்டால் அதிக பொருட் செலவு ஏற்படும். நடிகர்களின் கால்ஷீட்டும் வீணாகும். அதோடு போட்ட பட்ஜெட்டை விட அதிக செலவாகியுள்ளது.

பின்னர் சென்னை வந்ததும் மிஷ்கின் தனது சம்பளத்தை அதிகமாகக் கேட்டுள்ளார். காரணமாக, தனது முந்தைய படம் ஹிட்டாகி இருப்பதால், அதிகமாக வேண்டும் என்றாராம்.

அக்ரிமென்ட்டில் போட்டதைதான் தருவோம் என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஷெட்யூலுக்கான பட்ஜெட்டை கொடுக்கும்போது, முதலில் சொன்னதை விட அதிகமாக குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அவ்வளவு தொகை ஏற்பாடு செய்யமுடியாது என்று விஷால் தரப்பில் கூறப்பட்டதாம். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின்னர் படத்தில் இருந்து மிஷ்கினை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதை மிஷ்கினிடம் சொன்னதும் அவரும் விலகுவதாகத் தெரிவித்தாராம். பின்னர் அதற்கான ஒப்பந்தத்திலும் மிஷ்கின் கையெழுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஷாலே படத்தை இயக்க இருப்பதாகத் தெரிகிறது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply

Trending