‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!


திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம்
(மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


          சிங்காரவேலனே தேவா என்ற பாடலை முணுமுணுக்காத தமிழனே கிடையாது. சாந்தா ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் என்ற வசனம் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்காத இடமே இல்லை. பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் இந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க தங்களது மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுப்பார்கள். கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவ, மாணவியர் இதனைப் பாடாமல் இருக்க மாட்டார்கள். சமீபத்தில் நூறு கலைஞர்கள் இணைந்து இந்தப் பாடலைப் பாடினார்கள். அது யூ ட்யூபில் உள்ளது. இந்தப் பாடலை இயற்றியவர் கு. மா. பாலசுப்பிரமணியம் அவர்கள்.

          அந்தக் காலத்தில் பாட விரும்பியவர்கள் அனைவரும் ஒரு பாடலை கண்டிப்பாக பாட முயற்சி செய்திருப்பார்கள். அது “சித்திரம் பேசுதடி” என்ற சபாஷ் மீனா படத்தில் வரும் பாடல். இந்தப் பாடலின் விடியோ இந்தி நடிகர்கள் ராஜேந்திரகுமார்-ஆஷா பரேக் ஆகியொரின் நடிப்பில் கூட கிடைக்கிறது. ராஜேஷ் கன்னா-ஷர்மிளா தாகூர் நடிப்பில் ஒரு விடியோ உள்ளது. அந்த அளவிற்கு இந்த பாடலின் மீது அனைவருக்கும் ஒரு கிரேஸ். இந்தப்பாடலும் கு.மா.பா எழுதியதுதான்.

          கு. மா. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறந்த திரைப்படப் பாடலாசிரியரும் தமிழறிஞரும் ஆவார். குமாபா  என்று திரையிசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.

          குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம் ஆகிய இவர் 1920இல் திருவாரூர் அருகேயுள்ள வேளூக்குடியில் மாரிமுத்து கோவிந்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் தேவாரம், திருவாசகம், பக்திப் பனுவல்களை இசைக்கக் கூடியவராக இருந்தார். தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். வறுமையின் காரணமாக இவரது தாயாரால் ஆறாம் வகுப்புக்குமேல் இவரைப் படிக்க வைக்க இயலவில்லை. இதன்பிறகு வேளாண் தொழிலாளராகவும், மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை, துணிக்கடை போன்றவற்றில் வேலை செய்தார். பொட்டலம் மடிக்கும் வேலையின்போது ஓய்வு நேரத்தில் பழைய புத்தகங்களைப் படித்துவந்தார். இதனால் எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு சிறுகதைகளை எழுதத் துவங்கினார். எழுத்தாளர்கள் கா.மு.ஷெரீப், மேதாவி என்னும் கோ.த. சண்முகசுந்தரம் ஆகியோர் இவரின் சொந்த ஊரைச் சேர்ந்த இளமைக்கால நண்பர்கள். இவர் திருமதி ஜெயலட்சுமியை 1947இல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவர்களில் திரு கு.மா.பா. கபிலன் எனது நண்பர்.

பத்திரிகையாளர்

          சி.பா. ஆதித்தனார் மதுரையில் இருந்து வெளியிட்ட தமிழன் இதழின் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் கோவையில் திருமகள் இதழில் பணியாற்றினார். 1945இல் கொழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு 1947இல் நாடு திரும்பியவர் தமிழன் குரல் என்ற மாதம் இருமுறை இதழை நடத்தி இழப்பை சந்தித்ததால் அதனை விற்றுவிட்டு, சென்னைக்கு வந்து ம.பொ.சியின் தமிழ் முரசு இதழில் நுணை ஆசிரியராக இணைந்தார். அக்கால கட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் தமிழாசிரியராக இருந்த திருவேங்கடம் என்பவர் இவரின் எழுத்தாற்றலைக் கண்டு இவருக்கு மரபுக்கவிதைகளை எழுதக் கற்றுக்கொடுத்தார். இதன் பிறகு 1949ஆம் ஆண்டில் பாரதிதாசன் தலைமையில் கோவையில் நடந்த கவியரங்கில் தன் 28ஆம் வயதில் கலந்துகொண்டார்.

அரசியல் வாழ்க்கை

          சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் அரசியல் பணியாற்றினார். அக்கழகத்தின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பாரதிதாசன் மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.

எழுத்தாளர்

          ஏவிஎம் நிறுவனத்தின் கதை இலாகாவில் மாத ஊதியத்தில் இணைந்தார். அவர்களின் ஓர் இரவு படத்தின் உதவி இயக்குநராக ஆக்கப்பட்டார். அறிஞர் அண்ணா எழுதிய வசனங்களைப் படி எடுத்தல் இவரது பணி. படி எடுக்கும்போது தன்னார்வத்துடன் ஒரு காட்சிக்கு இவர் ஒரு பாடலை எழுதினார். “புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே” என்ற அந்தப்பாடல் படக்குழுவுக்குப் பிடித்துவிட்டதால் அது பாடல் பதிவு பெற்று, படத்தில் இடம் பெற்றாது.

          1962ஆம் ஆண்டில் கொஞ்சும் சலங்கை மற்றும் 1966இல் மகாகவி காளிதாஸ் திரைப்படங்களுக்கான திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதினார். மேலும் 1953 இல் பொன்னி, 1962இல் மடாதிபதி மகள் போன்ற திரைப்படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதினார். ஓர் இரவு (1951), கோமதியின் காதலன் (1955) ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் வேலைக்காரன் (1952) திரைப்படத்திற்கு கதை மற்றும் பாடல்களையும் எழுதினார்.

எழுதிய சில திரைப்படப் பாடல்கள்

  • யாரடீ_நீ_மோகினி – (உத்தம புத்திரன், 1958) – சிவாஜி அவர்களின் நடனம், நடன மங்கையர்களின் நடனங்கள், இசை ஆகியவற்றிப் பற்றி பெரிதாகப் பேசப்படும் இப்பாடம் கு.மா.பா அவர்கள் எழுதியது.
  • சின்னையா என்றழைத்த (தங்கமலை ரகசியம் படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
  • சித்திரம்_பேசுதடி (சபாஷ் மீனா)
  • காணா இன்பம் கனிந்ததேனோ, குங்குமப் பூவே கொஞ்சு புறாவே (மரகதம்) – குங்குமப்பூவே இடம்பெற்ற இப்பாடல் நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல் ஆகும்.
  • அன்பே என் ஆராவமுதே வாராய்
  • அமுதைப்_பொழியும்_நிலவே (தங்கமலை ரகசியம்)
  • மாசிலா_நிலவே_நம்_காதலை (அம்பிகாபதி)
  • நெஞ்சினிலே நினைவு முகம் (சித்ராங்கி)
  • சிரிக்கத் தெரியுமா (குழந்தைகள் கண்ட குடியரசு, 1960)
  • கவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே (அண்ணையின் ஆணை)
  • எந்தன்_உள்ளம்_துள்ளி விளையாடுவதும் ஏனோ (கணவனே கண்கண்ட தெய்வம்)
  • வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இயற்றினார்.

          உடல்நலக்குறைவால் இவர் 1994 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 4 ஆம் நாள் காலமானார். வாழ்க கு. ம. பா அவர்கள்.



Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply