வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா? – தயாரிப்பாளர் தாணு விளக்கம்

suriya

பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான போஸ்டரும் வெளியானது. இது ஜல்லிக்கட்டு தொடர்பான கதை எனவும் கூறப்பட்டது.

ஆனால், இந்த படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை. மாறாக சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் வெற்றி மாறன் ஈடுபட்டுள்ளார். அதேபோல், சூர்யா அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். எனவே, வாடிவாசல் படம் என்ன ஆச்சு என்கிற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில், வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கப்பட்டு விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவின் டிவிட்டர் பக்கத்தில் செய்து வெளியானது. ஆனால், அதன்பின்னரே இது போலியான டிவிட்டர் ஐடி என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக டிவிட் செய்துள்ள தாணு ‘இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம்.’ எனவும், ‘எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்’எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.