பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.
மேலும், ‘வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்..நிகழும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி ‘ 2017ம் வருடம் டிசம்பர் 31ம் தேதி அடுத்த சட்டமன்ற தேர்தலில் எனது கட்சி போட்டியிடும் என தெரிவித்தேன். கொடுத்த வாக்கை நான் எப்போதும் காப்பாற்றுவேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொரோனா பரவல் காரணமாக சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிரோடு திரும்பியதற்கு தமிழக மக்களின் பிரார்த்தனையே காரணம். எனவே, அவர்களுக்காக உயிரோ போனாலும் அதை விட பெரிய மகிழ்ச்சி எனக்கு கிடையாது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். எல்லோவற்றையும் மாற்றுவோம். மக்கள் எனக்கு துணை நிற்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. தோல்வி பெற்றால் அது மக்களின் தோல்வி..’ எனப் பேசியுள்ளார்.
Leave a Reply