![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 1 thyagaboomi - 1](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-60.jpg?resize=640%2C477&ssl=1)
தேச விரோத சக்திகளுக்கு வலு சேர்க்கிறதா தமிழ் சினிமா?!
பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில், சினிமாத் துறை பெரும் வளர்ச்சியை கண்டது. 1914 ஆம் ஆண்டு, சென்னையில் வெங்கையா என்பவரால், கட்டப்பட்ட “கெயிட்டி” திரை அரங்கமே, நமது நாட்டைச் சேர்ந்த ஒருவரால், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு என்ற பெருமையை பெற்றது.
ஆரம்ப காலத்தில் தமிழ் திரைப்படங்கள் மும்பையிலும், கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டன. நாளடைவில் தமிழகத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளி வந்து, வெற்றியும் பெற்றன. ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில், சுதந்திர தாகத்தை ஊட்டும் படங்களுக்கு, தடை விதித்து இருந்தது. அப்படியே ஏதேனும் திரைப்படங்கள் வந்தாலும், அதை தணிக்கை செய்து, சுதந்திர வேட்கை தூண்டும் காட்சிகள் நீக்கப்பட்டன. எனவே, தயாரிப்பாளர்கள் புராண கதைகளும், மாயாஜால கதைகளுமே அதிக அளவில் படங்களாக எடுக்கப்பட்டு வெளியிட்டனர்.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 2 chandralekha - 2](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-1.jpg?resize=447%2C675&ssl=1)
திராவிட இயக்கத் திரைப்படங்கள்: நமது நாடு விடுதலை அடைந்த பின்னர், நிறைய படங்கள் வெளிவந்து வியாபார ரீதியில் பெரும் வெற்றி பெற்றன. SS வாசன் அவர்கள், 1948 ஆம் ஆண்டு எடுத்த “சந்திரலேகா” என்ற திரைப்படம் அனைவரையும், தமிழ் சினிமா நோக்கி, திரும்பப் பார்க்க வைத்தது.
அந்தக் காலக்கட்டத்தில் 1949 ஆம் ஆண்டில் “நல்லதம்பி” என்ற திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா துரை அவர்கள் திரையுலகில் பிரவேசிக்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், 1950 ஆம் ஆண்டு “மந்திரிகுமாரி” என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் படங்கள், இந்த காலக்கட்டத்தில், மிக அதிகமாக வெளி வந்தது.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 3 parasakthi2 - 3](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-2.jpg?resize=640%2C360&ssl=1)
சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான, “பராசக்தி” 1952 ஆம் ஆண்டு, வெளிவந்தது. இந்த படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் அவர்கள், திராவிட சிந்தனைகளை படம் முழுக்க நிரப்பி இருந்தார். இறைவனை நிந்திக்கும் படங்களின் தொடக்கம், இந்த படம் என அழைக்கலாம். இந்த படத்தின் மூலமாக, “திராவிட சிந்தனை கருத்துக்கள்” திரையுலகில் பிரவேசிக்க அடித்தளமிட்டது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணியும் தொடங்கியது.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 4 parasakthi1 - 4](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-3.jpg?resize=600%2C450&ssl=1)
தென்னிந்தியாவில், சினிமா நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற நடிகை கே.பி. சுந்தராம்பாள் அவர்கள், தமிழகத்தின் மேல் சபையில் உறுப்பினர் ஆக்கப்பட்டு, 1951ஆம் ஆண்டு சட்டசபையில் நுழைந்த முதல் திரைப்பட கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து, இன்றளவும் தமிழக சினிமாவின் ஆதிக்கம் சட்டசபையில் இருந்துக் கொண்டே வருகின்றது.
இன்றும், திரைத்துறை மூலம் பிரபலமான, நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சட்டசபையில் உறுப்பினராக உள்ளார் என்பதன் மூலம், சினிமாவின் தாக்கத்தை, நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
தேச நலன் சார்ந்த திரைப்படங்கள்: ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் “தியாகபூமி”, “மாத்ருபூமி” போன்ற நாட்டுப் பற்றை ஊட்டும் தமிழ் திரைப்படங்கள், வெளி வந்தன. இது போன்ற படங்களில் தேச நலன் கருத்துக்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான அரசியல் பிரச்சாரமும் வெகுவாக காணப் பட்டது.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 5 kattabomman movie - 5](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-4.jpg?resize=640%2C320&ssl=1)
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில், சிறப்பாக நடித்ததினால், தன்னுடைய பெயருடன் “சிவாஜி” என்ற அடைமொழியும் சேர்க்கப்பட்டு, “சிவாஜி கணேசன்” என பெயர் பெற்றார், நடிகர் திலகம் அவர்கள். அவர் நடித்து 1959 ஆம் ஆண்டில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், 1961 ஆம் ஆண்டில் வெளிவந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறான “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் சுதந்திரப் போராட்ட வரலாற்றை நம் கண் முன் நிறுத்தின. “சுலபமாக கிடைக்கவில்லை சுதந்திரம்” என்ற சிந்தனையை, மக்களின் மனதில் உணர வைத்தது.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 6 kanthan karunai - 6](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-5.jpg?resize=600%2C357&ssl=1)
பக்திப் படங்களான 1965 ஆம் ஆண்டில் வெளியான “திருவிளையாடல்”, 1966 ஆம் ஆண்டில் வெளியான “சரஸ்வதி சபதம்”, 1967 ஆம் ஆண்டில் வெளியான “கந்தன் கருணை”, போன்ற திரைப்படங்கள், இந்து மதப் பெருமைகளை நன்கு எடுத்து உரைத்தன. இன்றும், அனைத்துக் கோவில் திருவிழாக்களில், ஒலிச் சித்திரமாக ஒலிபரப்பப் படுகின்றது.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 7 thiruvilaiyadal - 7](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-6.jpg?resize=640%2C360&ssl=1)
சீனர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட போதி தர்மரை, தமிழ் சமூகத்திற்கு நினைவு படுத்தும் வகையில், 2011 ஆம் ஆண்டில், வெளியான திரைப்படமே, “ஏழாம் அறிவு”. சீனர்கள் இன்றும் கொண்டாடும், தமிழகத்தில் பிறந்த போதி தர்மரின் வரலாற்றை மிக சிறப்பாக எடுத்துக் கூறி இருந்தனர்.
நிகழ்கால சினிமா: சில காலமாகவே, தமிழ் திரைப்படங்கள் இந்து மதத்திற்கு எதிராகவும், ஜாதி, மதம் மோதல்கள் அதிகமாகவும், பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில், நிறைய தவறானக் கருத்துக்களை, காட்சி படுத்துவது, நாம் அனைவரும் அறிந்ததே.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 8 ezham arivu - 8](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-7.jpg?resize=640%2C361&ssl=1)
2020 ஆம் ஆண்டில் வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில், அம்மன், மற்றொரு இந்து மதக் கடவுளான பெருமாள் மீது கோபம் கொள்வது போலவும், பெரும்பான்மையான பக்தர்களை கொண்ட இந்து மத சாமியார்களை கேலியாக, தவறாக சித்தரிப்பது போலவும் நிறைய காட்சிகள் இருந்தது.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 9 mookuthi amman - 9](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-8.jpg?resize=640%2C360&ssl=1)
2017 ஆம் ஆண்டில் வெளிவந்த “மெர்சல்” திரைப்படத்தில், ஜி.எஸ்.டி. (G.S.T.) பற்றி தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது, அது மிகப் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
மற்ற மதங்களின் மனம் புண்பட்டால் காட்சிகள் நீக்கப்படும்:
2006 ஆம் ஆண்டில் வெளிவர இருந்த, “டா வின்சி கோட்” (Da Vinci Code) என்ற திரைப்படம், கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்துவது போல காட்சிகள் இருப்பதால், இன்னும் வெளி வராமலேயே நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளது.
2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த, “துப்பாக்கி” என்ற திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் மனது புண்படும் வகையில், சில காட்சிகள் இருந்ததாக, இஸ்லாமிய அமைப்புகள் போராடின. பின்னர், பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, சில காட்சிகள் நீக்கப்பட்டு, படம் வெளி வந்தது.
2013 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளி வந்த “விஸ்வரூபம்” என்ற திரைப்படத்தில், சில காட்சிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக, இஸ்லாமியர்கள் போராடினார்கள். அதன் காரணமாகவே, அவர்களின் மனது புண்படும் காட்சிகள் நீக்கப்பட்டு, பின்னர் வெளியிடப் பட்டன.
![ச்சீ.. சீன்... சினிமா! தேச விடுதலை டூ தேசப் பிரிவினை! 10 viswaroopam 2](https://i0.wp.com/vellithirai.news/wp-content/uploads/2021/07/e0ae9ae0af8de0ae9ae0af80-e0ae9ae0af80e0aea9e0af8d-e0ae9ae0aebfe0aea9e0aebfe0aeaee0aebe-e0aea4e0af87e0ae9a-e0aeb5e0aebfe0ae9f-60-9.jpg?resize=640%2C429&ssl=1)
சில படங்கள் வன்முறையைத் தூண்டுவது போலவும், தவறு செய்பவர்கள் நல்லவர்கள் போலவும், தவறைத் தட்டிக் கேட்பவர்கள் மிகவும் கெட்டவர்கள் போலவும், காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருப்பது, இளம் வயதினர் மத்தியில், தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. அதையே தங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்க தொடங்குவது வேதனையாகவும் இருக்கிறது.
நிகழ்கால பேச்சு மொழி வழக்கங்கள், நாட்டு நடப்புகள் ஆகியவை குறித்தத் தோற்றத்தை நிறுவுவதில், தமிழ்த் திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனினும், இந்த பொறுப்பை உணராமல் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, அது வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக, சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.
உண்மையான தமிழர் வாழ்க்கையை உணர்த்தாமல், மாயத் தோற்றக் கதை களத்தில் இயங்குவதால், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் மத்தியிலும், பிற மாநிலத்தவர்கள், பிற நாட்டினர் மத்தியிலும், தமிழர்கள் பற்றி தவறான புரிதலை ஏற்படுத்த வழி வகுக்கும்.
“தங்களுக்கு பிடிக்காத கருத்துக்களை, திரைப்படங்களில் காட்டக்கூடாது” என சில சமுதாயத்தினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏன்? எனக் கேள்வி கேட்டால், “மதம் சார்ந்த நம்பிக்கைகளில், பிறர் தலையிடுவது தவறு” என சொல்கின்றார்கள். அதே சுதந்திரம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் அல்லவா?!
ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது போல, ஒவ்வொரு மதத்திற்கும் கருத்து சுதந்திரம் மாறுபடுவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை சரியான விடையை யாரும் அளிக்கவில்லை, என்பதே உண்மை.
பொழுது போக்கிற்காக பார்க்கப் படும் சினிமா, சிலருக்கு வாழ்க்கைப் பாடமாக கூட இருக்கும். எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டிய திரைத்துறை, யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது. எந்த விதத்திலும், தேச விரோத சக்திகளுக்கு வலு சேர்க்கக் கூடாது என்பதே, நமது எண்ணமாகவும் உள்ளது.
- அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai