
கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்! எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள்! விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என்று, சினிமா பாடல் கவிஞர் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மலையாள இலக்கிய வட்டாரத்தில் மிக உயர்ந்த மதிப்புக்கு உரியதாகக் கருதப் படும் ஓஎன்வி இலக்கிய விருது இந்த வருடம் ஓஎன்வி அகாடமியினரால் தமிழ் சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், கேரளத்தில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். #மீடூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவுக்கு விருது அறிவித்து, ஓஎன்வி.,க்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டதாக சினிமா உலகிலும் பலர் குரல் கொடுத்தனர். இதை அடுத்து, இது குறித்து மறுபரிசீலனை செய்வதாக, ஓஎன்வி அகாடமி அறிவித்தது.

இந்நிலையில், சமூகத் தளங்களில் வைரமுத்து விவகாரம் இன்று பெரிதும் எதிரொலித்தது.
வைரமுத்துவிற்கு விருதுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இப்போது அது மறுபரிசீலனையிலும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு விருது வேண்டாம், அதை ஏற்க மனம் விரும்பவில்லை என்று வைரமுத்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. விருதை திருப்பி தருகிறேன் என கூறியிருப்பதும், விருது தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுங்கள் என கூறியிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுக்கப்படாத விருதை எப்படி அவர் திருப்பி தர முடியும். அதேப்போன்று பெறாத தொகையை எப்படி அவர் திருப்பி தர முடியும் என பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மறுபரீசலனையில இருக்கிற விருதை ஒருத்தர் எப்படி திரும்ப தர முடியும்? அப்பறம் நிவாரண நிதிங்கறது சொந்தக் காசில தரது தானே? வராத விருதுக் காசை எப்படி தர்மம் செய்ய முடியும்?
எனக்கு கிடைத்த நோபல் ஞானபீட பாரத ரத்னா போன்ற பல விருதுகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வைரமுத்து இப்படி பீலா விடும் போது நான் விடக்கூடாதா?
Related
Source: Dhinasari News – Vellithirai News